Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Contact

 

 

   Users online ::

          நாகர்கோவில் என்னும் நமது கிராமத்தில் அமைந்துள்ள கண்ணகை அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்கல்திருவிழா வருடாந்தம் வரும் வைகாசி மாதத்தில் பெரும் சிறப்புடன் எம் கிராமத்து மக்களால் கொண்டாடப்படும். ஆண்கள் காவடிகள், கரகம்கள்,  பலவகையான "செடில்" முள் அங்கமெல்லாம் அணிந்தும், பெண்கள் பால்ச்செம்பு, தீச்சட்டி, வாயினைமூடி மடிப்பிச்சை, போன்ற வேண்டுதல்களை அம்மனை வேண்டி உடுக்கை சத்தங்களுடனும், பலவகையான மேளங்களுடனும் நாகர்கோவில் வடக்கு கிராமத்து குடிமனைகளுக்குள்ளே அமைந்துள்ள பல்வகையான ஆலயங்களில் இருந்து இவ்வேண்டுதலை ஆரம்பிப்பார்கள்.

          இவ்வேண்டுதலுடன் இக்கிராமத்து மக்களால் "காத்தவராயன்கூத்து" பலநாட்களாக ஆயர்த்தம் செய்துகொண்டு அன்றயதினத்தன்று கண்ணகை அம்மனுக்கு சமர்ப்பணம் செய்வார்கள். இக்காத்தவராயன் கூத்தினை பார்ப்பதற்கென்று பலபல கிராமத்தில் இருந்து மக்கள் பெருந்திரளாக வந்து பார்த்து மகிழ்வார்கள். இத்திருவிழாவை சிறப்பிக்கும் பெரும் பங்கினை இக்காத்தவராயன் கூத்தே ஆகும். இக் காத்தவராயன் கூத்தினை தயாரிப்பவர்கள் இக்கிராமத்து பெரியார்களே ஆவார்.

         திரு நல்லையா (தயாரிப்பாளர்) அவர்களால் பல ஆண்டுகளாக தயாரித்து வந்ததுடன் "அவரின் திறைமைகளில் பல உள்ளது அவற்றில் காத்தவராயன் கூத்தும் அடங்கும்"  இவர் எவ்வெவ் கதாபாத்திரங்களுக்கு எவரெவர் திறன்பட நடிப்பார்கள் என்று இனங்காணக்கூடியவர். அதற்கேற்ப்ப இக்கிராமத்தில் உள்ள மக்களில் தெரிவு செய்துகொள்வார் தெரிவு செய்பவர்களில் அனேகமானோர் அண்ணளவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களே ஆவர். திரு நல்லையா அவர்களால் தெரிவு செய்யப்படுபவர்கள் அனைவரும் ஒரு குருவிற்க்கு கொடுக்கவேண்டிய மரியாதைகள் அனைத்தையும் இவர்களால் கிடைக்கப்பெறுவார்.

      ஏறக்குறைய ஒருமாதத்திற்கு முன்னரே "அதாவது வைகாசிமாதத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு முதல் மாதமான சித்திரைமாதம்"  இக்காத்தவராயன்கூத்து தயாரிப்பாளர் திரு நல்லையா அவர்களால் தயார் செய்யப்படும். ஓரிரு கிழமைகளில் அவரது இல்லத்தில் வைத்தே நடிப்பினை சொல்லிக்கொடுப்பார். அதன்பின்னர் இக்கிராமத்தி அமைந்துள்ள முருகையாதேவஸ்தானத்திற்கு முன்பாக உள்ள விரூட்சமான உணாமரத்தடியில் ஒரு சிறிய கொட்டகை அமைத்து (தென்னமரஓலை "கிடுகு" மூலம்)  அதை கண்ணகை அம்மனைவேண்டி வேப்பமர கிழைகளால் அலங்கரித்து சிறியதொகை மக்கள் முன்னிலையில் இக்காத்தவராயன் கூத்து பழக்கப்படும்.

   அதன்பின்னர் ஓரிரு கிழமைகள்வரையில் இதேஇடத்தில் சொல்லிக்கொடுக்கப்படும். பின்னர் வைகாசிப்பொங்கல் வருவதற்கு முதலாக சுமார் ஒரு நான்கு அல்லது மூன்று தினங்களிற்கு முன் வெள்ளோட்டம் (முதற்கண்ணோட்டம்) என அனைத்து கதாபாத்திரதாரர்களும் அவர்களுக்குரிய வேடங்களை  ( உரிய உடைகளை அணிந்து)  அரங்கத்தில் எப்படி நடிப்பார்களோ அதேபோல் நடித்து எல்லோரும் அரங்கம் ஏற தயாரென உறுதியளிப்பார்கள்.

         அதன்பின்னர் இக்கிராமத்து மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாவான வைகாசிப்பொங்கல் தினத்தன்று சாயங்கால பூஜை முடிவடைந்ததும் சுமார் இரவு எட்டு தொடக்கம் ஒன்பது மணி இடைவெளியில் இக்காத்தவராயன் கூத்து ஆரம்பமாகி இக்கூத்து முற்றுப்பெறா அதிகாலை ஆகும்.

            இக்காத்தவராயன் கூத்தினை தயாரித்து வந்த திரு நல்லைய அவர்கள் அமரத்துவமடைந்ததும். இப்பணியினை திரு நல்லையா அவர்களால் அம்மன் கதாபாத்திரமாக  நடிப்பினை சொல்லிகொடுக்கப்பட்ட திரு சபாரத்தினம் (சவாரியப்பா என இக்கிரமமக்களால் அழைக்கப்படுவர்)  அவர்களால் தொடர்ந்து இக்காத்தவராயன் கூத்து உருவாக்காப்பட்டு வந்தது. அதேவேளையில் திரு சபாரத்தினம் ஆகிய இவர் முக்கிய கதாபாத்திரமான அம்மன் பாத்திரத்தினை ஏற்று நடித்தும் வந்தார். பல ஆண்டுகள் கடந்ததும் திரு சபாரத்தினம் அவர் அமரத்துவமடைந்தார். திரு சபாரத்தினம் அமரத்துவமடைந்ததும் இப்பணியினை. திரு சபாரத்தினம் ஆகிய இவருடன் இணைந்து இக்காத்தவராயன் கூத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்த திரு சுப்பையா என்பவரால் தொடர்ந்து இக்காத்தவராயன்கூத்தினை உருவாக்கியதுடன் பலபல புதிய கலைஞர்களையும் சேர்த்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் பணியாற்றிவந்தார். இக்காத்தவராயன் கூத்து பல ஆண்டு காலமாக இக்கிராம மக்களால் நடாத்திவந்த வேளையில் இக்காத்தவராயன் கூத்து 1995ம் ஆண்டுவரை நீடித்து வந்தது.

       1995ம் ஆண்டுவரை இக்கிராமத்து மக்களால் பாரம்பரிய கலையான இக்காத்தவராயன் கூத்து மிகவும் சிறப்பாக நடார்த்தி வந்த வேளையில். அரசியல் போராட்ட சூழல் காரணமாக 1995ம் ஆண்டிற்கு பின்னர் இக்கிராம மக்கள் இடம் பெயர்ந்து பலபல மாவட்ட கிராமங்களில் மிகவும் துன்பத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இக்கிராமம் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் சிக்குண்டுள்ளது.

 

  நன்றி

குறிப்பு::

 

 

 

 

இவ் ஆக்கத்தை எழுத்துருவாக்கித்தந்தவர், இக்கிராமத்தைச்சேர்ந்தவரே ஆவர். ஆனால் இவர் மிகவும் சிறிய பிராயம் உடையவர், 1975ம் ஆண்டிற்கு பின்பே இக்கிராமத்தில் பிறந்தவர், ஆகையினால் மேற்கூறிய ஆக்கத்தில் தவறுகள் இருப்பின் மன்னிப்பதுடன் அத்தவறினை இனங்கண்டு எமக்கு அறியத்தரவும். உடன் மீழ் திருத்தம் செய்துகொள்ளப்படுவதுடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்வோம்.

எமது மின்னஞ்சல்  முகவரி

 info@nakarmanal.com

 

   

www.nakarmanal.com